கர்த்தர் காணும் இருதயம்!
"மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்" (1 சாமு. 16:7).
ஒரு சிறந்த இசை மேதை, ஒரு இசை நிகழ்ச்சியில் கெம்பீரமாக இசையை மீட்டினார். மக்கள் அந்த நிகழ்ச்சியைப் பார்த்து மிகவும் மகிழ்ந்தார்கள். அப்போது அவருடைய உள்ளத்தில் ஒரு கேள்வி எழுந்தது. ஒருவேளை, நான் அறியப்படாத ஒருவனாக இசையை மீட்டினால் ஜனங்கள் அதை இப்பொழுதைப்போல ரசிப்பார்களா என்று அறிய விரும்பினார்.
ஆகவே அவர் ஒரு பிச்சைக்காரனைப் போல மாறுவேடம் பூண்டு தெரு முனையிலே நின்று தன்னுடைய வயலின் இசையை மீட்ட ஆரம்பித்தார். மிக அழகாக வாசித்தார். ஆனால் ஜனங்களோ பரியாசம் செய்தார்கள். நேற்று பாராட்டப்பட்ட அதே இசை இன்றோ புறக்கணிக்கப்பட்டது. காரணம் மனுஷன் முகத்தைத்தான் பார்க்கிறான்.
இஸ்ரவேலை ஆளப் புது ராஜாவைத் தேடி சாமுவேல் போகையில், ஈசாயின் மூத்த மகனாகிய எலியாபைக் கண்டு, அவனே பொருத்தமானவன் என்று எண்ணினார். ஆனால் கர்த்தரோ, "நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீர வளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான், கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்" (1 சாமு. 16:7) என்றார்.
தேவபக்தி கர்த்தருக்குப் பிரியமான ஒரு அழகு. மட்டுமல்ல, தாழ்மையின் சுபாவம், சாந்தகுணம் ஆகியவையும் அவருக்குப் பிரியமான அழகுகள். அவையே உள்ளத்தின் மற்றும் ஆத்துமாவின் அழகுகள். திருமண நேரத்தில் அநேகர் வெளித்தோற்ற அழகையே பார்க்கிறார்கள். ஆனால் வேதம் இவ்வாறு சொல்லுகிறது, "சௌந்தரியம் வஞ்சனையுள்ளது. அழகும் வீண்” (நீதி. 31:30). "கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள். அவளுடைய செய்கைகள் வாசல்களில் அவளைப் புகழக்கடவது" (நீதி. 31:30,31).
அன்று பரிசேயரும், சதுசேயரும் வெளித்தோற்றத்தில் தங்களைப் பரிசுத்தவான்களைப் போலக் காண்பித்தார்கள். ஆனால் அவர்களுக்குள்ளேயோ குறைசொல்லுகிற ஆவிகளும், அருவருப்புகளும் நிரம்பியிருந்தது. கர்த்தர் சொன்னார், "மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறீர்கள், அவைகள் புறம்பே அலங்காரமாய்க் காணப்படும். உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும். அப்படியே நீங்களும் மனுஷருக்கு நீதிமான்கள் என்று புறம்பே காணப்படுகிறீர்கள்; உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள்" (மத்.23:27,28).
தேவபிள்ளைகளே, கர்த்தர் காண்கிறதைப் போல காணக் கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் காணும் தேவனுடைய பிள்ளைகள் ஏழ்மையாய் இருந்தாலும், அவர்கள் உண்மையும் உத்தமுமாய் இருந்தால் அவர்களைக் கனம்பண்ணுங்கள். வெளிதோற்றத்தைப் பார்த்து அவர்களைப் புறக்கணியாதிருங்கள்.
நினைவிற்கு :- "வெளித்தோற்றத்தின்படி பார்க்கிறீர்களா? ஒருவன் தன்னைக் கிறிஸ்துவுக்குரியவனென்று நம்பினால், தான் கிறிஸ்துவுக்குரியவனாயிருக்கிறதுபோல நாங்களும் கிறிஸ்துவுக்குரியவர்களென்று அவன் தன்னிலேதானே சிந்திக்கக்கடவன்" (2 கொரி. 10:7).