கனமுள்ளது!
"விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும்…. " (எபி. 13:4).
மே மற்றும் டிசம்பர் மாதங்களில் வரும் திருமண அழைப்பிதழ்கள் கணக்கில்லாதவை. சில கிறிஸ்தவ திருமண அழைப்பிதழ்கள் வரும்போது, அதில் நான்கு பக்கமும் மஞ்சள் பூசி வருகிறதை பார்த்திருக்கிறேன். முன்பெல்லாம் நல்ல நாளை மட்டும் பார்த்துக் கொண்டிருந்த கிறிஸ்தவர்கள் இப்பொழுது நல்ல நேரத்தையுங்கூட பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். இத்தனை மணியிலிருந்து இத்தனை மணிக்குள் திருமணம் நடக்கும் என்று குறிப்பிட்டு, நேரத்திலும்கூட புறஜாதியாரைப் பின்பற்றுகிறார்கள்.
வேதத்திலே, கர்த்தர் நாள், நேரம், சகுனம் பார்க்கிறவர்களை கடிந்துகொள்கிறார். ஜோதிடர்களிடம் போய்க் காசு கொடுத்து நல்லநேரம் நல்லநாள் கேட்டு குறித்து ஒழுங்கு செய்யப்படுகிற திருமணத்தை கர்த்தர் எவ்விதமாய் ஆசீர்வதிக்க முடியும்?
மார்ட்டீன் லுத்தர் தன்னுடைய காலத்திலே, கிறிஸ்தவர்களின் ஜோதிடம் கணிக்கும் பழக்கவழக்கங்களைக் குறித்து மிகவும் வன்மையாய்க் கண்டித்தார். “குழந்தை பிறந்த ராசி அக்குழந்தையின் தலைவிதியை நிர்ணயிக்கிறது என்று இந்த ஜோதிடர்கள் கூறுகிறார்கள். நான் அவர்களைப் பார்த்து கேட்கிறேன். ஏசாவும் யாக்கோபும் ஒரே சமயத்தில் அடுத்தடுத்து பிறந்தனர். அப்படியானால் ஏன் அவர்கள் இயல்பும் வாழ்வும் ஒரே மாதிரியாக இல்லாமல் மிக அதிகமான வேறுபாடுகள் நிறைந்ததாய் இருந்தன?" என்று அவர் வினவினார்.
தேவபிள்ளைகளே, உங்களுடைய வீட்டுத் திருமணத்தை தேவசித்தத்தின்படி முழங்காலில் நின்று ஒழுங்கு செய்யுங்கள். கர்த்தருடைய பிரியம் அதில் பரிபூரணமாய் விளங்கட்டும். “விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளது” என்று வேதம் சொல்லுகிறது (எபி. 13:4).
விவாகம் ஏன் கனமுள்ளது? முதல் திருமணத்தை கர்த்தர் ஏதேன் தோட்டத்தில் நடத்தி வைத்தார். முதல் அற்புதத்தைக்கூட ஒரு திருமண வீட்டில்தான் நிகழ்த்தினார். மட்டுமல்ல, நித்தியத்திலே கிறிஸ்துவே உங்களுடைய ஆத்தும மணவாளனாய் இருக்கிறபடியினால் அவர் ஒவ்வொரு திருமணத்தையும் கனமுள்ளதாகவே காண்கிறார். உண்மையாகவே தேவனால் இணைக்கப்படுகிற குடும்பங்கள் மிக இனிமையானதாகவும், மகிழ்ச்சியுள்ளதாகவும் விளங்குகின்றன. அவர் விவாகம் என்பதை உலகத்தோற்றத்திற்கு முன்பாகவே முன் குறித்து திட்டமிட்டு தம்முடைய எல்லையில்லா ஞானத்தினால் நிறைவேற்றினார்.
விவாகம் என்பது கணவனும் மனைவியும் மாத்திரம் இணைக்கப்படுவது அல்ல. அவர்கள் கிறிஸ்துவோடுகூட இணைந்திருப்பதையே அது வெளிப்படுத்துகிறது. ஆகவேதான் "முப்புரி நூல்" என்று சாலொமோன் குறிப்பிட்டார். முப்புரி நூல் சீக்கிரமாய் அறாது என்று வேதம் சொல்லுகிறது. கணவன், மனைவி மற்றும் கிறிஸ்து என மூவரும் முப்புரி நூலாக இணைக்கப்படும்போது, எந்த சத்துருவினுடைய வல்லமையும் அவர்களைப் பிரிக்கவே முடியாது. தேவபிள்ளைகளே, கணவனும் மனைவியும் கிறிஸ்துவோடு ஆழமான ஐக்கியங்கொள்ளும் போதுதான் அந்த இல்லற வாழ்க்கையில் தெய்வீக சமாதானமும் சந்தோஷமும் நிலவும். அந்த விவாகம்தான் கனமுள்ளதாயிருக்கும்.
நினைவிற்கு :- "…அவனவன் தன்னிடத்தில் அன்புகூருவதுபோல, தன் மனைவியினிடத்திலும் அன்புகூரக்கடவன்; மனைவியும் புருஷனிடத்தில் பயபக்தியாயிருக்கக்கடவள்" (எபேசியர் 5:33).