கரம் குறுகவில்லை!

"இதோ, இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப் போகவுமில்லை" (ஏசாயா 59:1).

நீங்கள் கர்த்தருடைய கரத்திலிருக்கிறீர்கள். கர்த்தருடைய கரம் பலமுள்ள கரம், வல்லமையுள்ள கரம். மட்டுமல்ல, கடைசிவரை உங்களை தாங்குகிற கரம்.  "உன்னை என் உள்ளங்கைகளில் வரைந்திருக்கிறேன்" என்று கர்த்தர் சொல்லுகிறார் அல்லவா? ஆம், உங்களை வரைந்திருக்கிற அவருடைய பலத்த கரம் உங்களை கடைசிவரை வழிநடத்த வல்லமையுள்ளது.

ஒருமுறை ஒரு பக்தியுள்ள ராணுவ அதிகாரி தன் மனைவியோடு கடலில் பிரயாணம் பண்ணிக் கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாய் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலைமை வந்தது. மனைவி, "ஐயோ, நான் மரிக்கப் போகிறேனே; கடலிலா என் மரணம் ஏற்பட வேண்டும்?" என்று தவித்தாள், தடுமாறினாள். அந்த ராணுவ அதிகாரி என்ன நினைத்தாரோ தெரியவில்லை. பட்டயத்தை உருவி மனைவியை கொன்றுவிட்டு தானும் மரித்து விட எண்ணினார்.

உடனே மனைவி தடுத்து ‘உங்களுடைய கரம் என்னைக் கொல்லவே முடியாது. அந்த கரம் என்னை நேசிக்கும் கரம், எனக்கு தாலிக்கட்டிய கரம். இத்தனை ஆண்டுகளாய் என்னை பாதுகாத்த கரம்’ என்று சொல்லி கரத்தை முத்தமிட்டாள். அந்த அன்பு ராணுவ தளபதியைத் தொட்டது. வாளை கீழே போட்டுவிட்டு தன் வலது கரத்தினால் மனைவியை பிடித்துக் கொண்டு வீராவேசமாக நீந்தி கரையில்போய்ச் சேர்ந்தார். ஆம், அந்த அன்பின் கரம் மனைவியைப் பாதுகாத்தது.

நீங்கள் கர்த்தருடைய கரத்தை நோக்கிப் பார்ப்பீர்களா? அந்தக் கரம் ஒருபோதும் உங்களுக்கு தீமை செய்யவே செய்யாது. அந்தக் கரம்தான் இஸ்ரவேல் ஜனங்களை எகிப்தியரின் அடிமைத்தனத்திலிருந்து விலக்கி மீட்டது. ஓங்கிய புயமும் உயர்ந்த கோலும் இஸ்ரவேலருக்கு ஆதரவாய் இருந்ததினாலே செங்கடல் இரண்டாய்ப் பிரிந்தது. கர்த்தருடைய பலமுள்ள கரம் இஸ்ரவேலரை எந்த சேதமும் அணுகாதபடி பாதுகாத்தது. சங்கீதக்காரன் சொல்லுகிறார், "உம்முடைய கரம் பராக்கிரமமுள்ளது; உம்முடைய வலதுகரம் உன்னதமானது" (சங். 89:13).

கர்த்தருடைய கரம் ஒருபோதும் உங்களுக்கு தீமை எய்யாத கரம். உங்கள்மேல் அன்பு வைத்ததினால் அல்லவா அந்த கரம் சிலுவையிலே நீட்டப்பட்டது! ஆணிகள் கடாவப்பட அவர் மகிழ்ச்சியோடு தன் கரத்தை ஒப்புக்கொடுத்தார். அந்த கரத்தை உங்கள் பக்கமாய் நீட்டி “என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்; உன் மதில்கள் எப்போதும் என் முன் இருக்கிறது" (ஏசா. 49:16) என்று சொல்லுகிறார். அந்தக் கரம் ஒருபோதும் உங்களை மறப்பதில்லை.

தாவீது சொல்லுகிறார், "அவர் நம்முடைய தேவன்; நாம் அவர் மேய்ச்சலின் ஜனங்களும், அவர் கைக்குள்ளான ஆடுகளுமாமே" (சங். 95:7). இயேசு சொன்னார்: "…ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை" (யோவா. 10:28).

தேவபிள்ளைகளே, நீங்கள் அவருடைய மேய்ச்சலின் ஆடுகளாய் இருக்கிறதினாலே எப்போதும் அவருடைய பலத்த கரத்தில் அடங்கி இருக்க தீர்மானியுங்கள். அங்கும் இங்குமாக அலைந்து திரியாமல் ஏற்ற காலத்தில் அவர் உயர்த்தும்படி அவருடைய பலத்த கரத்திலே உங்களை ஒப்புக்கொடுங்கள்.

நினைவிற்கு :- "…தம்முடைய வாக்கினால் சொன்னதைத் தம்முடைய கரத்தினால் நிறைவேற்றினார்" (1 இராஜா. 8:15).