கவலைப்படாதிருங்கள்!
"கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?" (மத். 6:27).
கவலை ஒரு முள் போன்றது. அந்த முள் உங்கள் இருதயத்தைக் குத்தி வேதனைப்படுத்துகிறது. ஆவிக்குரிய வாழ்க்கையை நெருக்கிவிடுகிறது. இந்த உலகம் கவலை நிறைந்த உலகம். அநேகர் வெளிப்பார்வைக்கு சிரிப்போடு காணப்பட்டாலும், அவர்களுடைய உள்ளான வாழ்க்கை கவலையினால் நிரம்பியிருக்கிறது.
வேதம் சொல்லுகிறது, “நீங்கள் கவலையற்றவர்களாயிருக்க விரும்புகிறேன். விவாகமில்லாதவன் கர்த்தருக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று, கர்த்தருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான். விவாகம் பண்ணினவன் தன் மனைவிக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று, உலகத்திற்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான்" (1 கொரி. 7:32,33).
போதகர்களைப் பாருங்கள். அவர்களைக்கூட இந்த கவலை சும்மா விடவில்லை. அப். பவுல் எழுதுகிறார்: "…எல்லாச் சபைகளைக் குறித்தும் உண்டாயிருக்கிற கவலை என்னை நாள்தோறும் நெருக்குகிறது" (2 கொரி. 11:28). உண்மையான ஊழியர்களால் சபையைக் குறித்து கவலைப்படாமல், ஆத்தும பாரம் கொள்ளாமலிருக்கவே முடியாது. ‘ஜனங்களுக்கு வேண்டிய பரலோக மன்னாவைக் கொடுக்கவேண்டுமே’ என்று கவலைப்படாமலிருக்கவே முடியாது. கவலைகள் உங்களுடைய வாழ்க்கையில் வந்தாலும், அவற்றில் மூழ்கிப்போய் விடக்கூடாது. கவலைகளையும், பாரங்களையும் கர்த்தர் மேல் வைக்கக் கற்றுக் கொள்ளவேண்டும். எப்போதும் தேவ சமாதானத்தினால் நிரம்பி தேவனைத் துதிக்க உங்களை ஒப்புக்கொடுக்க வேண்டும்.
ஒரு முறை ஒரு அரசாங்க உயர் அதிகாரிக்கு இரத்த அழுத்த நோய் வந்தது. காரணம் அவருடைய அலுவலகத்தில் அவருக்கு இருந்த வேலைப் பளுதான். மந்திரிகள் போன்ற முக்கியஸ்தர்களின் நேரிடைத் தொடர்பில் பயத்துடனும் அழுத்தத்துடனும் ஒவ்வொரு காரியத்தையும் அவர் செய்யவேண்டியிருந்தது. அவரைப் பரிசோதித்த மருத்துவர் உடனடியாக அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் தீவிர சிகிச்சைப் பெற வேண்டுமென்றும் ஆலோசனைக் கூறினார். அந்த அதிகாரியோ தனக்கு ஒரு நாள் தவணை வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.
அந்த நாளில் அவர் தன் வீட்டிற்குத் திரும்பினார். தன்னுடைய கவலைகளையெல்லாம் வரிசையாக எழுதினார். அதை வேத புத்தகத்தில் வைத்து, "ஆண்டவரே இந்த பொறுப்பையெல்லாம் உம்முடைய கரத்தில் கொடுத்துவிட்டேன். இவை எனக்கு அழுத்தம் தராதபடி காத்துக்கொள்ளும்" என்று ஜெபித்தார். ஆண்டவரை முழு இருதயத்தோடு துதித்தார்.
அடுத்த நாள் மருத்துவர் அவரைப் பரிசோதித்து ‘இரத்த அழுத்த நோய்க்குரிய எந்த அறிகுறியுமே இல்லையே. இது எப்படி நடந்தது’ என்று மருத்துவர் ஆச்சரியத்தோடு கேட்டார். அதற்கு அவர், "கர்த்தர்மேல் என் பாரத்தை வைத்துவிட்டு அவரை ஸ்தோத்திரித்தேன். அதைவிட பெரிய மருந்து ஒன்றுமில்லை என்பதைக் கண்டுகொண்டேன்" என்றார். தேவபிள்ளைகளே, இன்று அலை அலையாய் கவலைகள் உங்கள்மேல் மோதிக்கொண்டிருக்கின்றனவா? கலங்காதேயுங்கள் உங்கள் கவலைகளை ஏற்றுக்கொண்டு சுமக்க இயேசு ஆவலுள்ளவராயிருக்கிறார். அவர் மேல் உங்கள் கவலைகளை வைத்துவிடுங்கள்.
நினைவிற்கு :- "முள்ளுகளுக்குள்ளே லீலிபுஷ்பம் எப்படியிருக்கிறதோ, அப்படியே குமாரத்திகளுக்குள்ளே எனக்குப் பிரியமானவளும் இருக்கிறாள்" (உன். 2:2).