கண்கள் கண்டவை!
"உசியா ராஜா மரணமடைந்த வருஷத்தில், ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக் கண்டேன்" (ஏசா. 6:1).
உன்னதமான தேவனை, உன்னதமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக் காண்பது, எவ்வளவு பெரிய பாக்கியம்! அவருடைய மகிமையைத் தரிசிப்பது எவ்வளவு அருமையான ஒரு சிலாக்கியம்! தேவனை காண்பவர்கள் முற்றிலும் மாற்றப்படுவது நிச்சயம் அல்லவா? ஏசாயா கண்ட மூன்று காரியங்களைக் குறித்து தியானிப்போம்.
முதலாவதாக, அவர் தேவனைக் கண்டார். "சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டது" என்கிறார். உசியா ராஜா மரணமடைவதற்கு முன்பு ஏசாயாவின் கண்கள் அந்த ராஜாவையும், அவருடைய சிங்காசனத்தையுமே பார்த்துக் கொண்டிருந்தது. அந்த ராஜா அவனுடைய எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்து, உதவி செய்யக்கூடியவராக இருந்தார். ஆனால் உசியா மரணமடைந்தபோதோ ஏசாயாவின் வாழ்க்கை ஆட்டம் கண்டது. ஊழியத்தில் சோர்படைந்தார். இனி கர்த்தரைத் தேடுவதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லையென்று உணர்ந்தபடியால் கர்த்தருடைய ஆலயத்திற்குப் போய் முழங்காற்படியிட்டார்.
அப்போது கர்த்தர் அவருடைய கண்களைத் திறக்கச் செய்தார். அவருடைய கண்கள் ராஜாதி ராஜாவான கர்த்தரைக் கண்டது. எத்தனைக் கெம்பீரமான தேவன் அவர்! எவ்வளவு மகிமையான ராஜா அவர்! "ஏசாயாவே, உன்னை ஆதரித்த அரசன் மரணமடைந்ததினால் அவனது சிங்காசனம் இப்போது காலியாக இருக்கிறது. இப்பொழுது நீ மேலே நோக்கிப் பார். இங்கே நான் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறேன். சகல ஆளுகையும் அதிகாரமும் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகவே நீ பயப்படாதே. நான் உன்னை ஆதரிப்பேன்" என்று தன்னிடம் சொல்லுவதை உணர்ந்தார்.
இரண்டாவதாக, ஏசாயா தேவனுடைய வஸ்திரத்தொங்கலைக் கண்டார். அந்த வஸ்திரத் தொங்கலால் தேவாலயம் நிரம்பியிருந்தது. புதிய ஏற்பாட்டில், நீங்களே கர்த்தருடைய ஆலயமாக இருக்கிறீர்கள். வஸ்திரத் தொங்கல் என்பது, தேவனுடைய வல்லமையைக் குறிக்கிறது.
தேவபிள்ளைகளே, பரலோகத்திலுள்ள தேவதூதர்கள் மத்தியிலே தேவன் மகிமையாக வீற்றிருந்தாலும், அவருடைய வஸ்திரத் தொங்கலானது, கீழே பூமிவரைக்கும் எட்டி, உங்களது அருகிலே தொங்கிக் கொண்டிருக்கிறது. எந்த சமயத்திலும் நீங்கள் தேவனுடைய வல்லமையைத் தொடவும் உணரவும் முடியும். அந்த வல்லமையினால் ஏற்படும் அற்புதத்தை அனுபவிக்க முடியும். விசுவாசத்தோடு உங்களுடைய கரத்தை நீட்டுவீர்களா?
மூன்றாவதாக, ஏசாயா சேராபீன்களைக் கண்டார். அவர்கள் கர்த்தரைத் துதிக்கிற சேராபீன்கள். ‘கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர். பூமியனைத்தும் அவருடைய மகிமையினால் நிரம்பியிருக்கிறது’ என்று அவர்கள் பாடிக் கொண்டிருந்தார்கள். சேராபீன்கள் கர்த்தரை அவ்விதமாகத் துதிப்பார்களென்றால், நீங்கள் அவரை எவ்வளவாய்த் துதிக்கக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்! தேவபிள்ளைகளே, பாவங்களற உங்களைக் கழுவி, உங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவரை முழு பெலத்தோடும், முழு இருதயத்தோடும் துதிப்பீர்களாக! கேருபீன்களோடும் சேராபீன்களோடும் சேர்ந்து கர்த்தரை மகிமைப்படுத்துவீர்களாக!
நினைவிற்கு :- "ராஜாவாகிய என் தேவனே, உம்மை உயர்த்தி, உம்முடைய நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிப்பேன்" (சங். 145:1).