கலங்கவேண்டியதில்லை!
"…இவனிமித்தம் ஒருவனுடைய இருதயமும் கலங்க வேண்டியதில்லை” (1சாமு. 17:32).
"இவனிமித்தம் கலங்க வேண்டியதில்லை" என்பதே தாவீது சொன்ன நம்பிக்கையின் வார்த்தையாக இருக்கிறது. பெலிஸ்திய வீரனாகிய கோலியாத்தின் தோற்றம் இஸ்ரவேலர் அனைவரையும் கலங்கப் பண்ணிற்று. ஆனால், தாவீதோ கலங்கவில்லை. மாத்திரமல்ல, மற்றவர்களையும் கலங்க வேண்டாமென்று சொல்லி திடப்படுத்துகிறவனாக இருந்தான்.
உலகத்தில் பிறக்கிற ஒவ்வொருவருக்கும் உபத்திரவமுண்டு. ஆனால், தேவபிள்ளைகளாகிய நீங்கள் கலங்கி சோர்ந்து போகாமல், ஜெயம் பெறுகிறவர்களாக இருக்கும்படி அழைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை மறந்து போய்விடக்கூடாது. எந்த ஒரு மனுஷனுடைய கண்கள் பிரச்சினைகளை நோக்கிப் பார்க்காமல், கர்த்தரை நோக்கிப் பார்க்கின்றனவோ அவன் ஜெயம் பெற்றவனாக விளங்குவான்.
அன்று சவுலும், அவனுடைய சேனைவீரர்களும் கோலியாத்தை பெரிய ராட்சஸனாகப் பார்த்தார்கள். ஆனால் தாவீதோ, கோலியாத்திலும் பெரியவர் தன்னுடைய பட்சத்தில் நிற்கிறதை பார்த்தான். கர்த்தருடைய நாமத்தினால் தனக்கு ஜெயம் கிடைக்கும் என்பதை விசுவாசித்ததுடன் கர்த்தருடைய வல்லமையைக் குறித்தே எண்ணினான். ஒருவேளை தாவீதின் உள்ளத்தில் தான் தோல்வியடைந்தால் என்ன நேரும் என்கிற எண்ணம் வந்திருக்கத்தான் செய்யும். அவன் தோல்வியடைந்தால் அவனுடைய உயிர் முதலாவது போயிருக்கும். சவுல் ராஜா ராஜ்யபாரத்தை இழந்து போயிருப்பான். இஸ்ரவேலரும் பெலிஸ்தியருக்கு அடிமைகளாகியிருந்திருப்பார்கள்.
ஆனால், தாவீது அதைக்குறித்து சிந்தித்து சோர்ந்து போகாமல், கர்த்தருடைய நாமத்தினாலே வெற்றியின் வார்த்தைகளைப் பேசினான். பெரிய கோலியாத்தைப் பார்த்து, சிறிய தாவீது என்ன சொன்னான் தெரியுமா? "இன்றையதினம் கர்த்தர் உன்னை என் கையில் ஒப்புக்கொடுப்பார்; நான் உன்னைக் கொன்று, உன் தலையை உன்னைவிட்டு வாங்கி பெலிஸ்தருடைய பாளயத்தின் பிணங்களை இன்றையதினம் ஆகாயத்துப் பறவைகளுக்கும், பூமியின் காட்டு மிருகங்களுக்கும் கொடுப்பேன்; அதனால் இஸ்ரவேலில் தேவன் ஒருவர் உண்டு என்று பூலோகத்தார் எல்லாரும் அறிந்து கொள்ளுவார்கள்" (1 சாமு.17:46) என்றான்.
சந்திக்கும் பிரச்சனைகளுக்காகவோ உலக மனுஷன் உங்களுக்கு விரோதமாய் எழும்பி நிற்பதற்காகவோ கலங்காதேயுங்கள், வேதம் சொல்லுகிறது, "உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்" (யோவான் 14:1).
“தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?” (ரோமர் 8:31), “தேவன் தெரிந்துகொண்டவர்கள் மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்?” (ரோமர் 8:33), “நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்கு பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்" (சங். 23:4) என்ற வசனங்களையெல்லாம் சொல்லி விசுவாச அறிக்கை செய்யுங்கள். தேவபிள்ளைகளே, நீங்கள் அப்படி விசுவாச அறிக்கை செய்யும்போது, உங்கள் பிரச்சினைகள் நிச்சயமாகவே முறிந்து ஓடும்.
நினைவிற்கு :- "விருத்தசேதனமில்லாத இந்தப் பெலிஸ்தனும் அவைகளில் ஒன்றைப் போல இருப்பான்; …..என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த கர்த்தர் இந்தப் பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார்" (1சாமு. 17:36,37).